சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

முதல் ஆயிரம்   ஆண்டாள்  
நாச்சியார் திருமொழி  

Songs from 504.0 to 646.0   ( திருவில்லிபுத்தூர் )
Pages:    Previous   1  2  3  4    5  6  7  8  Next
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து
காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி
தீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்



[562.0]
இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்



[563.0]
வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்துப்
பொரிமுகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்



[564.0]
குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்



[565.0]
Back to Top
ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே



[566.0]
கருப்பூரம் நாறுமோ? கமலப் பூ நாறுமோ?
திருப் பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி-வெண்சங்கே



[567.0]
கடலிற் பிறந்து கருதாது பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தலத்
திடரிற் குடியேறி தீய அசுரர்
நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே



[568.0]
தட வரையின் மீதே சரற்கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும்
வட மதுரையார்-மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெருஞ் சங்கே



[569.0]
சந்திர-மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஒன்று இன்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே



[570.0]
Back to Top
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன் ஆகி நின்ற மதுசூதன் வாயமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன்னியமே



[571.0]
போய்த் தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடிகொண்டு
சேய்த் தீர்த்தமாய் நின்ற செங்கண் மால்தன்னுடைய
வாய்த் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே



[572.0]
செங்கமல நாள்-மலர்மேல் தேன் நுகரும் அன்னம் போல்
செங்கண் கருமேனி வாசுதேவனுடைய
அங்கைத் தலம் ஏறி அன்ன-வசஞ் செய்யும்
சங்கு-அரையா உன் செல்வம் சால அழகியதே



[573.0]
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாயமுதம்
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார்
பண் பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே



[574.0]
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயிற் கொண்டாற்போல் மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால்
சிதையாரோ உன்னோடு? செல்வப் பெருஞ்சங்கே



[575.0]
Back to Top
பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும்
வாய்ந்த பெருஞ் சுற்றம் ஆக்கிய வண்புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே



[576.0]
விண் நீல மேலாப்பு
      விரித்தாற்போல் மேகங்காள்
தெண் நீர் பாய் வேங்கடத்து என்
      திருமாலும் போந்தானே?
கண்ணீர்கள் முலைக்குவட்டிற்
      துளி சோரச் சோர்வேனைப்
பெண் நீர்மை ஈடழிக்கும்
      இது தமக்கு ஓர் பெருமையே?             



[577.0]
மா முத்தநிதி சொரியும்
      மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட
      தாளாளன் வார்த்தை என்னே?
காமத்தீ உள்புகுந்து
      கதுவப்பட்டு இடைக் கங்குல்
ஏமத்து ஓர் தென்றலுக்கு
      இங்கு இலக்காய் நான் இருப்பேனே?         



[578.0]
ஒளி வண்ணம் வளை சிந்தை
      உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் இட்டு என்னை
      ஈடழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என்
      கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள்
      ஆவி காத்து இருப்பேனே?



[579.0]
மின் ஆகத்து எழுகின்ற
      மேகங்காள் வேங்கடத்துத்
தன் ஆகத் திருமங்கை
      தங்கிய சீர் மார்வற்கு
என் ஆகத்து இளங்கொங்கை
      விரும்பித் தாம் நாள்தோறும்
பொன் ஆகம் புல்குதற்கு என்
      புரிவுடைமை செப்புமினே



[580.0]
Back to Top
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த
      மா முகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத்
      திரண்டு ஏறிப் பொழிவீர்காள்
ஊன் கொண்ட வள்-உகிரால்
      இரணியனை உடல் இடந்தான்
தான் கொண்ட சரி-வளைகள்
      தருமாகிற் சாற்றுமினே             



[581.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song